புதுச்சேரியில் வரும் 13ஆம் தேதி முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்கிறது. புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
அதில் பதிவான வாக்குகள் கடந்த மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில், 16 தொகுதிகளில் வென்றால் ஆட்சியைப் பிடிக்கலாம். இந்த நிலையில், நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 18 தொகுதிகளில் வென்றது. அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் தனியாக 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் எல்.ஜே.கே. ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி, புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். பெரும்பான்மை இருப்பதைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். இதன் மூலம், புதுச்சேரியில் வரும் 13ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

