சென்னை: "எங்கள் அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை. போனை போட்டாலும் எடுக்கவில்லை.. குதிரை பேரம் நடந்துள்ளது..
காமராஜ் விலை போயிருக்கலாம். முதல் நாளிலே இப்படி செய்துவிட்டு விஜய் எப்படி தன்னை தூயசக்தி என கூறிக்கொள்ளலாம். இராவணன் சீதையை தூக்கியதுபோல், எனது எம்.எல்.ஏ.வை தூக்கி இருக்கிறார்கள். விஜய் தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்க முடியும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கொந்தளித்து புகார் கூறியிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் அரசியல் திருப்பங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.. தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அக்கட்சியின் தலைவர் விஜய் காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவு கடிதங்களுடன் இன்று 3வது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அமமுக எம்எல்ஏ காமராஜ்
இருந்தாலும், ஆளுநர் தரப்பிலிருந்து அவருக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இன்று இரவு திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, அதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் டிடிவி தினகரன் வழங்கியுள்ளார்.. அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளால் தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..
காமராஜ் காணவில்லை
இதனிடையே, வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "எங்கள் எம்.எல்.ஏ.வை காணவில்லை. இது குதிரை பேரமாக இருக்கலாம் என கருதுகிறோம். அவர் ஃபோன் மூலமாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் தான் காமராஜும் புதுச்சேரியில் தங்கியிருந்தார். இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவரது ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக எனது எம்.எல்.ஏ காமராஜை நாங்க பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கிறோம்.
தூய சக்தி என்று சொல்லிவிட்டு..
ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது தொடர்புகொள்ள முடியவில்லை. முதலில் போன் போட்ட போது அவர் எடுக்கவில்லை. அவரது செல்போனை பிடுங்கி வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. அவர் மாயமாகியுள்ளார். மக்கள் விஜய்க்கு 108 இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
மன்னார்குடியில் தவெகவை எதிர்த்து எங்கள் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருக்கிறார். தூய சக்தி என சொல்லிவிட்டு, முதல் நாளே இப்படி குதிரை பேரத்தில் ஈடுபடுவது சரியானதா? இது தவெகதான் செய்தது என குற்றஞ்சாட்டுகிறேன். .தவெகதான் இதை செய்திருக்க முடியும்? வேறு யார் செய்திருப்பார்கள்?
இதுவரை தமிழ்நாட்டில் இப்படி நாம் கேள்விப்பட்டதே இல்லை.. திமுக, தவெகவுக்கு எதிராக மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ் எம்எல்ஏ. மக்கள் அங்கு அமமுகவுக்குதான் ஓட்டு போட்டிருக்காங்க.
குதிரை பேரம் நடந்துள்ளது
எங்கள் எம்எல்ஏ தானாக வந்து சப்போர்ட் செய்தால்கூட, அதை நான் ஏற்க மாட்டேன்.. இதை தவெகதான் செய்திருக்கும். விஜய்க்கு ஆதரவாக லெட்டர் தந்தது வேறு யாராக இருக்கும்? ரோட்டில் போகும் ராமசாமி செய்திருப்பாரா? அல்லது குப்புசாமி செய்திருப்பாரா?
தூய சக்தி, தூய்மையான அரசு தருவேன் என்று சொல்லிவிட்டு விஜய், முதல் நாளே இப்படியொரு குதிரை பேரத்தில் ஈடுபடுவது சரியா? இந்த குதிரை பேரத்தைதான் ஆளுநரிடம் புகார் மனுவாக தந்துள்ளேன்." என்று கொந்தளித்து கூறினார் டிடிவி தினகரன்
Hema Vandhana Oneindiasource: oneindia.com

