இதுவரை 116.. இன்னும் 2.. இன்று மாலை மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்

இதுவரை 116.. இன்னும் 2.. இன்று மாலை மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்

Oneindia

Oneindia

50m

Loading...

சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை 3ஆவது முறையாக சந்திக்கிறார் விஜய். இடதுசாரிக் கட்சிகள் இன்று தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தவெகவுக்கான ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. விசிகவும் ஆதரவு அளித்த பிறகு, தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா என அப்போது ஆளுநர் கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, நேற்றும் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். எனினும், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

விஜய் இரண்டு முறை ஆளுநரை சந்தித்திருந்தாலும், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி தங்களிடம் தேவையான பெரும்பான்மை பலம் இருப்பதை காட்ட வேண்டும், பெரும்பான்மையை நிரூபிக்காமல் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியாது என்று ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏ.க்களை நேரில் காட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது சட்டமன்றத்திலேயே நடைபெறும் என்றும் கூறியுள்ளார். பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைந்த பிறகு குதிரை பேரம் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை தாம் அனுமதிக்க முடியாது என்றும், இது ஜனநாயகத்திற்கு பாதிப்பாகும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பி இருந்தது தவெக. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தின. அவர்களின் முடிவைப் பொறுத்தே விசிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. விசிக தமது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளது.

இந்தச் சூழலில் தான் இன்று மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்க உள்ளார் விஜய். தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கும் 118 எம்.எல்.ஏக்கள் பெயர் பட்டியலுடன் விஜய், ஆளுநரை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நாளை பதவியேற்பு விழா நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Vignesh Selvaraj Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Tamil