கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் அடுத்த முதலமைச்சராக சுவேந்து அதிகாரியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநிலத்தில் முதல் பாஜக முதலமைச்சர் என்கிற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.
மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்பட்ட பவானிபூர் தொகுதியில் அவரைத் தோற்கடித்து சுவேந்து அதிகாரி சாதனை படைத்துள்ளார். மேலும் தனது சொந்த தொகுதியான நந்திகிராமிலும் வெற்றி பெற்றுள்ளார்.
294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையடுத்து யார் அடுத்த முதலமைச்சர் என்கிற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுவேந்து அதிகாரியை அடுத்த முதலமைச்சராக அறிவித்திருக்கிறார்.
நாளை (மே 9) கொல்கத்தாவின் புகழ்பெற்ற பிரிகேட் பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நவீன் மற்றும் பல்வேறு மாநில பாஜக முதலமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
யார் இந்த சுவேந்து அதிகாரி?
சுவேந்து அதிகாரி ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்தவர். 2011-ல் இடதுசாரிகளின் 34 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்திய நந்திகிராம் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
2021-ல் பாஜகவில் இணைந்த அவர், தற்போது உண்மையான மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த பாஜக அரசு வங்காளத்தில் 100 ஆண்டுகள் நீடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் சுவேந்து அதிகாரிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அமித் ஷாவின் பாராட்டு: சுவேந்து அதிகாரியை ஒரு சிறந்த "போராளி" என்று புகழ்ந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில நிர்வாகத்தின் பல்வேறு தடைகளைத் தாண்டி அவர் நிகழ்த்திய சாதனை பாஜக தொண்டர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
Halley Karthik Oneindiasource: oneindia.com

