தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார். அதன்படி திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடி இருந்தார். முதலில் காங்கிரஸ் மட்டும் தவெகவிற்கு ஆதரவு கொடுத்திருந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன.
இதனையடுத்து சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரு கட்சிகளும் இன்று தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

