சென்னை: தங்க முதலீடு திட்டம் என்பது லாபகரமான ஒன்றாக இருந்தாலும், அதை முறையாக ஆய்வு செய்யாமல் முதலீடு செய்வது பெரும் ஆபத்தில் முடிந்துவிடும்..
சென்னையில் தங்க முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் சுருட்டிய தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. அரசு அங்கீகாரம் பெற்ற திட்டங்களை விடுத்து, தனிநபர்களை நம்பி பணத்தை ஒப்படைப்பவர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கித் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது..
தங்க முதலீடு என்பது ஒரு பாதுகாப்பான சேமிப்பு முறையாகவும், பொருளாதார நெருக்கடி காலங்களில் கைகொடுக்கும் சிறந்த அரணாகவும் பார்க்கப்படுகிறது.
தங்க நாணயங்கள் - டிஜிட்டல் கோல்டு
மக்கள் பொதுவாக நகைகளாக வாங்குவதையே விரும்பினாலும், தற்போது டிஜிட்டல் கோல்டு, தங்கப் பத்திரங்கள் மற்றும் கோல்டு இ.டி.எஃப் போன்ற நவீன முறைகள் அதிக லாபத்தை ஈட்டித் தருகின்றன.. குறிப்பாக, அரசு வழங்கும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது, தங்கத்தின் விலை உயர்வதுடன் ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது.
மேலும், இதில் செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகள் இல்லாததால், நீண்ட கால நோக்கில் பெரும் லாபத்தை இது உறுதி செய்கிறது.. முறையான சேமிப்பு பழக்கத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு தங்க நகை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.. நகைக்கடைகளில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, திட்டத்தின் முடிவில் செய்கூலி மற்றும் சேதாரம் இன்றி நகைகளை வாங்குவது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
தங்கப் பத்திர திட்டம் - முதலீடு
எனினும், முதலீடாகப் பார்க்கும் போது, பிசிக்கல் கோல்டு எனப்படும் கட்டிகள் அல்லது நாணயங்களை விட, காகித வடிவிலான அல்லது டிஜிட்டல் முறையிலான தங்க முதலீடு அதிக பாதுகாப்பானது.. இதில் திருட்டுப் பயம் இல்லை என்பதோடு, எப்போது வேண்டுமானாலும் சந்தை விலைக்கு ஏற்ப எளிதாக பணமாக்கிக் கொள்ளும் வசதியும் இருப்பதால், இது ஒரு நவீன காலச் சிறந்த முதலீட்டுத் தேர்வாகத் திகழ்கிறது.
ஆனால், இத்தகைய முதலீட்டு ஆர்வத்தை சாதகமாகப் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் பணத்தைப் பறிக்கும் மோசடி கும்பல்களும் அதிகரித்துள்ளன.. இந்நிலையில், சென்னையில் தங்க முதலீடு தொழில் செய்து வருவதாக கூறி வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை தம்பதி மோசடி
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு கல்லறை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்.. 25 வயதான இவருக்கு பெரம்பூர் காமராஜர் நகரைச் சேர்ந்த 49 வயதான சிவக்குமார் மற்றும் அவரது மனைவி 41 வயதான பத்மினி ஆகியோருடன் கடந்த 2024-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், தான் பெரிய அளவில் தங்க முதலீடு தொழில் செய்து வருவதாக தினேஷ்குமாரிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.. தன்னிடம் தங்கத்தில் முதலீடு செய்தால் மிக குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக சிவக்குமார் மற்றும் பத்மினி இருவரும் தினேஷ்குமாரை நம்ப வைத்துள்ளனர்.
தங்க முதலீடு திட்டம்
இவர்களின் பேச்சை உண்மை என்று நம்பிய தினேஷ்குமார், சிறுகச் சிறுக சுமார் 15 லட்சம் ரூபாயை சிவக்குமாரின் தங்க முதலீடு திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்..
ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சிவக்குமார் தம்பதியினர், சொன்னபடி எந்த லாபத் தொகையையும் வழங்காமல் நீண்ட நாட்களாக காலம் கடத்தி வந்துள்ளனர்.. ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்த தினேஷ்குமார் தான் கொடுத்த 15 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டுள்ளார்.. ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க சிவக்குமாரும் பத்மினியும் மறுத்ததோடு, தினேஷ்குமாரை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்..
அதிக லாபம் ஆசை
இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார் மற்றும் அவரது மனைவி பத்மினி ஆகிய இருவரையும் புதன்கிழமை அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த மோசடியில் இவர்களது மகனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளைஞரின் புகார் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சென்னை மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது..!!!
Hema Vandhana Oneindiasource: oneindia.com

